Content text Tamilum Thozhilnutpam Unit 3 Final VK VK.pptx
உற்பத்தித் தொழில் நுட்பம்
தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கீழை மற்றும் மேலை நாட்டினரோடு கடல் வணிகம் செய்து வந்துள்ளனர். இவற்றிற்கு வரலாற்றுச் சான்றுகளும், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும், கல்வெட்டுச் சான்றுகளும் ஆதாரங்களாக அமைந்துள்ளன. கடல் வழிப்பயணம் என்பது எளிமையானதன்று. இயற்கையைப் பற்றிய துல்லிய ஆராய்ச்சிப்பார்வை கொண்டவர்களால் மட்டுமே கடல்வழிப்பயணத்தைத் திட்டமிட்டு செயல்படுத்த முடியும். காற்றின் போக்கு, அது வரும் திசை, காற்றின் அழுத்தம் ஆகியன பற்றிய அனுபவம் கடல்வழிப்பயணத்திற்கு மிக அவசியமானது. அத்தகைய திறனை பண்டைய தமிழர்கள் பெற்றிருந்தனர். பாய்மரக்கப்பல்கள் கட்டுவதில் பேரறிவுபெற்ற தமிழர்களின் கப்பல்கட்டும் திறன், கடல்வழி குறித்த அறிவு, கப்பலைச் செலுத்தும் திறன், கடற்கொள்ளையர்களை எதிர்கொள்ளும் போர்த்தொழில் உள்ளிட்ட திறன்களை அவர்கள் பெற்றிருந்தனர். இதுவே பண்டைய தமிழர் தமிழக நிலப்பரப்பையும் கடந்து பல தீவுகளில் கால்பதிக்கக் காரணமாகியது எனலாம். நாடுகளுடனான வணிகத்தொடர்புகள், பெறப்பட்ட பண்டங்கள், ஏற்றுமதி செய்யப்பட்டவை குறித்து பல குறிப்புகள் நம் இலக்கியங்களில் உள்ளன. நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது தொல்காப்பியம். அந்நூல் ‘முந்நீர் வழக்கம்’ என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது. எனவே, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம். 3.1 கப்பல் கட்டும் கலை
3.1.1 சங்க இலக்கியத்தில் கப்பல் தமிழர்கள் கப்பல்களைக் கட்டினர் என்பதற்கும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்றனர் என்பதற்கும் நம் இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியில், நெடிய பாய்மரத்தோடு கூடிய மரக்கலங்கள் பொன்மிகுதற்குக் காரணமாகிய சிறந்த பொருட்களைக் கொண்டு வந்தன என்றும், துறைமுகங்களில் மேலை நாட்டுக் குதிரைகளும், பிற பொருட்களும் மரக்கலங்களில் வந்து இறங்கின என்பதை பொன்மலிந்த விழுப்பண்டம் நாடார நன்கிழிதரும் ஆடியற் பெருநாவாய் என்னும் அடிகளால் அறியலாம். கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து என்னும் திருக்குறள், திருவள்ளுவர் காலத்திலேயே பெரிய கப்பல்கள் இருந்தன என்பதற்குச் சான்றசாகும். பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதைப் பட்டினப்பாலை விரிவாக விளக்குகிறது.
‘வெளில் இளக்கும் களிறு போலத் தீம்புகார்த் திரை முன் றுறைத் தூங்கு நாவாய்த் துவன் றிருக்கை மிசைக் கூம்பின் அசைக் கொடியும்’ இந்தத் துறைமுகத்தில் வந்து தங்கிய நாவாய் (கப்பல்)கள், கம்பங்களில் கட்டப்பட்ட யானைகள் அசைந்து கொண்டிருப்பது போல, துறைமுகத்தில் அசைந்துகொண்டிருந்தன என்று கடியலூர் உருத்திரன் கண்ணனார் கூறுகிறார். “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ, இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி, விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட“ எனத் தொடங்கும் அகநானூறு பாடல் ஒன்றில், உலகமே கூடிக் கிளர்ந்து சென்றது போன்ற அச்சத்தை ஏற்படுத்திய பெரிய கப்பலானது வேகமாக வீசும் இயல்புடைய காற்றானது அசைத்துச் செலுத்த, இரவு பகலாக ஓரிடத்தும் தங்காமல் புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய பெரிய கடல் நீர்ப்பரப்பைக் கிழித்துச் சென்றது என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள். வெளிநாட்டுக்குத் தமிழகத்திலிருந்து ஏற்றுமதியான பொருட்களில் மிளகைப்போல் சிறந்தது முத்து ஆகும். பாண்டிநாட்டுத் துறைமுகங்களில் முத்துகளையும், சங்குகளையும் திமிலில் கொண்டுவந்து இறக்கினர். கொற்கைத் துறைமுகம் பாண்டிய நாட்டின் செல்வச் செழிப்பின் அடையாளமாகத் திகழ்ந்தது. கடல் அலைகளால் முத்துகள் இழுத்து வரப்பட்டு கடற்கரையில் ஒதுங்கின. அவ்வழியே சென்ற குதிரைகளின் கால்களில் அந்த முத்துச்சிப்பிகளும் முத்துகளும் மோதின. இதனால் குதிரையின் வேகம் தடைபட்டதாம். இவ்வாறு பாண்டிய நாட்டின் வளம் பொருந்திய துறைமுகமாகிய கொற்கையில் முத்துக் குளித்தல் சங்ககாலத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றதை கீழ்வரும் அகநானூறு பாடல் எடுத்து இயம்புகின்றது. ...... இவர்திரை தந்த ஈரங்கதிர் முத்தம் கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றோர் வழுதிக் கொற்கை முன்றுறை